Memories

Monday, October 10, 2011

ஸ்டீவ் ஜாப்ஸ் மேலும்...

ஸ்டீவ் ஜாப்ஸ் ஸ்டான்போர்ட் கல்லூரி மாணவர்களுக்கு ஆற்றிய உரையில் இருந்து சில பகுதிகள்:
1) "என் வாழ்கையில் சம்பந்தம் இல்லாமல் நிறைய நடந்திருக்கிறது. அதற்கெல்லாம் அர்த்தம் எனக்கு முதலில் புரியவில்லை. ஆனால் சுமார் பத்து ஆண்டுகளுக்கு பின்னால் ஆப்பிள் நிறுவனத்தைத் தொடங்கிய போது தான் எல்லாவற்றிற்கும் சம்பந்தம் புரிந்தது - நடந்த எல்லாம் இந்த நிறுவனத்தை தொடங்கவே நடந்தது. இதனால் உங்களுக்கு சொல்லும் அறிவுரை : வாழ்கையைப் பின்னோக்கி பார்க்கும்போது தான் புரியும், ஆனால் முன்னோக்கி பார்க்கும்போது ஒன்றும் புரியாது. நெறைய விஷயங்கள் நடக்கும், ஏன் என்று தெரியாது. ஆனால் நம்பிக்கை கொள்ளுங்கள்: நடப்பவை எல்லாம் ஏதோ ஒரு சம்பந்தத்தை ஏற்படுத்தவே நடக்கிறது. அது பின்னால் தான் புரியும்." 

2) "என் வாழ்கையில் வெற்றியின் உச்சத்தில் நான் வேலை இழந்தேன், சில மாதங்களுக்கு ஒன்றும் புரியவில்லை. பின் நான் தொடங்கியது தான் பிக்ஸார் நிறுவனம், NeXT நிறுவனம். இந்த நிறுவனத்தை வாங்கியது ஆப்பிள்; என்னையும் திரும்ப கொண்டு வந்தது. வேலை இல்லாத கட்டத்தில் தான் கல்யாணம் செய்தேன். புதிய நிறுவனங்களை தொடங்கினேன். புதிய சிந்தனைகள் வந்தன. நான் வேலையிலும் வெற்றியிலும் திளைத்திருந்தால் இதெல்லாம் நடந்திருக்காது. வேலையானது உங்கள் வாழ்கையின் பெரும் பகுதியை வியாபித்திருக்கிறது. அதனால் உங்களுக்கு பிடித்ததை செய்யுங்கள். அப்போது தான் மிக சிறந்த படைப்பு உங்களில் இருந்து வெளியாகும்." 

3) "2004-ஆம் வருடம் எனக்கு கான்செர் இருக்கிறதென்று சொன்னார்கள். கணையத்தில் வருகிற கான்செர். ஒரு பத்து வருடம் வாழ்க்கை இருக்கும் என்றார்கள். சாவதற்கு தயாராகு என்று சொன்னார் டாக்டர். இறப்பு ஆண்டவனுடைய மிகப் பெரிய கண்டுபிடிப்பு. புதுமையை உண்டாக்கக் கூடிய கருவி. இறப்பு ஒரு அறிவார்ந்த விஷயம்: இறப்பு யாருக்கும் பிடிக்காது. சொர்கத்துக்கு செல்பவர்கள் கூட இதற்காக இறக்க விரும்ப மாட்டார்கள். ஆனால் இதற்குத் தப்பியவர்கள் யாரும் இல்லை, இது நிதர்சனம். இப்போது மாணவர்களாக இருக்கிற நீங்கள் இன்னும் பல்லாண்டுகள் கழித்து வயது முதிர்ந்து, உடல் தளர்ந்து, இந்த  உலகிலிருந்து களையப் படுவீர்கள். கேட்க கஷ்டமாக இருந்தாலும் இது நிச்சயமான உண்மை. இந்த உண்மை நமக்கு உணர்த்துவது என்னவென்றால் நமக்கு கிடைத்திருக்கக் கூடிய நேரம் குறைவு. இதில் அடுத்தவர் சொல்கிற வாழ்கையை வாழாமல் உங்களுக்கு பிடித்த வாழ்கையை வாழுங்கள். அடுத்தவர் என்ன சொல்வார் என்று எண்ணாமல் உங்கள் உள்மனது சொல்வதை கேட்டு வாழுங்கள். உங்கள் மனதை கேட்டு வாழக் கூடிய தைரியத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். உங்கள் மனதுக்கு மட்டுமே தெரியும், நீங்கள் என்னவாக வேண்டும் என்று, உங்களுக்கு உண்மையிலேயே என்ன பிடிக்கும் என்று."   

முழு உரை ஆங்கிலத்தில் இங்கே: http://news.stanford.edu/news/2005/june15/jobs-061505.html 




No comments:

Post a Comment