Memories

Wednesday, October 19, 2011

மகாபாரதத்தில் இருந்து ஒரு குட்டிக் கதை

மகாபாரதத்தின் முடிவில் இந்த மனித உடலோடு சொர்க்கம் செல்லும் வாய்ப்பு தருமன் ஒருவனுக்கு மட்டுமே கிடைத்தது. இந்த பொழுதில் கூட அவனுக்கு ஒரு பரீட்சை வைக்கப் பட்டது. அது பற்றி தனியே எழுதுகிறேன், இப்போது இந்த கதைக்கு வருவோம்.
சொர்க்கத்துக்கு சென்ற தருமன் அங்கே துரியோதனனைப் பார்த்தான். தருமனுக்கோ ஒரே ஆச்சர்யம். துரியோதனனுக்கு ராஜ மரியாதை கிடைத்துக் கொண்டு இருந்தது. போரில் வீரமரணம் அடைந்ததால் அவனுக்கு சொர்க்கம் கிட்டியது என்று அவனுடன் வந்த தரும தேவதை சொல்லியது.
என் தம்பிகளை எங்கே என்று தருமன் கேட்பதற்குள் அவனுக்கு கடைசி தம்பி சகதேவனின் அலறல் குரல் கேட்டது. அடுத்து நகுலன் துடித்து அலறுவது கேட்டது. அர்ஜுனனும் பீமனும் எங்கே என்று எண்ணிக் கொண்டு அந்த திசை நோக்கி விரைந்தான் தருமன்.  ஒரு காவலன் அது நரகம் செல்லும் வழி என்றான். இப்போது அர்ஜுனனின் ஆங்காரக் குரல் கேட்டது. பீமன் யாரையோ சபிக்கிறான் போலும்...ஒரு கணம் கூட தாமதிக்காமல் அந்த வழியாக நடக்க ஆரம்பித்தான் தருமன், அங்கே காரிருள், பல குரல்கள் கேட்டன. ஒரு அளவுக்கு மேல் தருமனுக்கு கண் தெரியவில்லை. அங்கேயே நின்றான். இப்போது அவனை சுற்றி அவன் தம்பிகள் வலியால் அலறும் குரல்கள் கேட்டன. தான் தம்பிகளுக்கு ஏன் இந்த நிலை என்று அவன் உள்ளம் கொதித்தது. ராஜ்ஜியம் இல்லாத போது இந்த வேதனை படவில்லை, காட்டில் படவில்லை, போரில் படவில்லை...திரவுபதி என்ன ஆனாள் என்று  நினைக்க ஆரம்பித்தான். சுற்றி கேட்ட பல குரல்களில் தூரத்தில் மெல்லிதாக அவள் குரல் கேட்டது. தம்பிகளை கூவி அழைத்தான், திரவுபதியை கூப்பிட்டான். யாரும் பதில் சொல்லவில்லை. தருமனுக்கு நெஞ்சு வெடித்து விடும் போல இருந்தது.
அவனை தரும தேவன் கூப்பிட்டான்: சொர்க்கம் அவனை அழைக்கிறது அது தான் தருமன் இருக்க வேண்டிய இடம் என்றான். தருமனோ தான் தம்பிகள் இருக்கும் இடமே தனக்கும் போதும், இங்கேயே இருந்து விட போவதாக கூறி தரும தேவனை திரும்பி போய்விட கூறினான்.
ஒரு நாழிகை கழிந்தது. தருமன் இருந்த இடத்தில் அலறல் குரல்கள் மறைந்தன, ஒளி வந்தது. அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. தரும தேவன் சிரித்த வண்ணம் நின்றிருந்தான்: "உன் தம்பிகள் சொர்க்கத்திலேயே இருக்கிறார்கள். தருமத்தை நிலை நிறுத்த வேண்டி நீ சில பாவங்களை செய்திருக்கிறாய். அவைகளை கழிக்க வேண்டி நீ ஒரு நாழிகை நரகத்தை அனுபவிக்க வேண்டி இருந்தது. அதோ உன் தம்பிகள் சொர்க்கத்தில் மகிழ்வுடன் இருப்பதை பார்."

மகாபாரத நீதி: தருமத்தின் வழி மிக சிக்கலானது, அதை புரிந்து கொள்வது அவ்வளவு சுலபம் அல்ல.



No comments:

Post a Comment