Memories

Saturday, January 7, 2012

சமீபத்தில் ரசித்த படம்: சதிலீலாவதி



1990 களில் வந்தாலும் இன்றும் ரசிக்க வைக்கிற படம். ரமேஷ் அரவிந்த், கல்பனா, ஹீரா பிரதான பாத்திரங்களில் நடித்தாலும் கமலஹாசன், கோவை சரளா படத்தை தூக்கி உக்கார வைக்கிறார்கள். சபாபதி என்கிற காரக்டரில் ஒரு நாய் வேறு.(அதன் அறிமுகக் காட்சியே நம்மை சிரிக்க வைத்து விடுகிறது) 

அருண் என்கிற சபல கேஸ் (ரமேஷ் அரவிந்த்) லீலாவதி (கல்பனா) என்கிற பணக்கார மனைவி. கொஞ்சம் வெடுக் வெடுக் என பேசும் குணம் உள்ள லீலாவதி உண்மையில் ரொம்ப நல்லவர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள், அருணுடைய அப்பாவும் இவர்களுடனே இருக்கிறார். அருனுக்கோ ரொம்ப மாடர்ன் பெண்ணான, பணத்தை ரொம்ப விரும்புகிற பிரியா (ஹீரா) என்ற பெண்ணிடம் பழக்கம் கிடைகிறது. அருண் ஏற்கனவே திருமணம் முடித்தவர் என்பது தெரியாமல் காதலிக்க ஆரம்பிக்கிறார். பணம் என்றால் பிணமும் வாயை திறக்கும் என்பது நினைவுக்கு வருகிறது (?!) இந்த ஜோடி பெங்களுரு செல்கிறார்கள். போகும் போதே  தற்செயலாக அருண் தன்னுடைய பால்ய நண்பன் சக்திவேல் கவுண்டரை (கமல்) பார்கிறார். 

"அருணு..." என்று கமல் கூப்பிடும் போதே தெரிந்து விடுகிறது, கமல் களை கட்டுவார் என்று. ரமேஷ் அரவிந்த் விஷயம் அவர் மனைவிக்கு தெரிந்து அவர் சண்டை போட்டு வீட்டை விட்டு இவரை அனுப்பி விட அந்த ஜோடிக்கு வசதியாக போய் விடுகிறது. அவர்கள் செட்டில் ஆகி விடுகிறார்கள். கோபப் பட்டு லீலாவதி, சதி லீலாவதியாக மாறி பல வேலைகள் செய்கிறார். கமல் இதற்க்கெல்லாம் உதவி செய்ய ரமேஷ் அரவிந்த் அவர் மனைவியிடம் சேர்கிறார், ஹீரா அவருடைய முன்னாள் காதலருடன் சேர்கிறார். எல்லாம் சுபமாக முடிகிறது.

பாலு மகேந்திரா இயக்கம். பல இடங்களில் செவ்வாய் கிழமை டி.வி நாடகம் போல காட்சி அமைப்புகளும், செட் அமைப்பும் இருக்கிறது. 

படத்துக்கு உயிர் கொடுக்கும் இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால் அது கிரேசி மோகனுடைய வசனம். சும்மா பின்னிருக்கார்... 

"குலைக்கிற நாய் எங்கயாவது கடிக்குமா மாமி ?"
"அது உனக்கும் எனக்கும் தெரியறது. அதுக்கு தெரியுமோ ?"

"மூக்கு போடி போட்டா நோய் வரும்னு சொல்றாங்க, அதை விட்டுடுங்களேன்"
"இப்ப உள்ள பொடிக்கு தும்மலே வர மாட்டேன்கறது"

பக்கத்துக்கு  வீடு மாமி லீலாவதியின் மாமனார் குறித்து சொல்லும் வசனம்: "அது பெரிய சபாபதி, இது குறைக்கிறது; அது பேசறது"
படம் முழுக்க சொல்லிட்டே போகலாம். எல்லா நடிகர்களும் பாத்திரம் அறிந்து நன்கு நடித்து இருக்கிறார்கள். கமல் பற்றி சொல்லவே வேண்டாம். கோயம்புத்தூர் பாஷையை அவ்வளவு அழகாக பேசி இருக்கிறார். கூடவே கோவை சரளா வேறு:
"அதான் தொடைல தட்டி தட்டி பாடுவாங்கல்லோ...அதே மாறி பாடுங்கோ"
"மாமா, ஏன் பாட்ட நிறுத்திப் போட்டீங்கோ...உங்க சங்கீதத்தில தொபுக்கடீர்னு குதிச்சு நீச்சலடிக்கலாமுன்னு வந்த என்ன ஏமாத்தி போடாதீங்கோ மாமா.."
எல்லா பாலு மகேந்திரா கதாநாயகிகள் போல, ஹீரா அழாகாக இருக்கிறார். 
படத்தில் கதாபாத்திரங்கள் அழகாக படைக்கப் பட்டு இருக்கின்றன, அந்த நுணுக்கங்கள் பாலு மகேந்திராவின் திறமை என்று சொல்லலாம்.

இது பழைய தத்துவம்: "ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னால் ஒரு பெண் இருக்கிறாள், தோல்விக்கு பின்னால் இருவர் இருக்கிறார்கள்"

No comments:

Post a Comment